
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது.
கடப்பிதழ் மோசடிகள், போலி ஆவணத் தயாரிப்புகள் மற்றும் அடையாளத் திருட்டுகளை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் அதிநவீன _biometrics_ தொழில்நுட்ப சில்லு, ஒளிரும் சிறப்புப் பாதுகாப்புப் பக்கங்கள் மற்றும் கள்ளத்தனமாக மாற்ற முடியாத _laser_ தொழில்நுட்பப் பதிவுகள் போன்ற அனைத்துலகத் தரத்திலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தற்போது பொது மக்கள் பயன்படுத்தி வரும் பழைய கடப்பிதழ்கள் அவற்றின் காலாவதி தேதி வரை தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், புதிய கடப்பிதழ் அறிமுகத்தால் விண்ணப்பக் கட்டணங்களில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்றும் குடிநுழைவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மலேசியர்கள் உலக நாடுகளுக்குப் பாதுகாப்பாகவும் தடையின்றியும் பயணிப்பதை உறுதிச் செய்ய இந்த புதிய கடப்பிதழ் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.



