கோலாலம்பூர், மார்ச் 11 – மீன்கள் குவிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் மீன் வளத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
அந்த காணொளி நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சந்தேகம் அளிக்கும் கூறுகள் மற்றும் தடை செய்யப்பட்ட சாதனங்களை பயன்படுத்தி, சட்டவிரோதமாக அந்த மீன்கள் பிடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக, மலேசிய மீன்வளத்துறை துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அட்னான் ஹுசைன் தெரிவித்தார்.
அதிக இலாபத்திற்காக, மீன்வளத்தை கட்டுப்பாடு இன்றி சுரண்டும் தரப்பினரின் செயல் வருத்தம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், அச்சம்பவம் எங்கு எப்பொழுது நிகழ்ந்தது? ; மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட சாதனம் ஆகியவை குறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இவ்வேளையில், சந்தேகிக்கும் அம்சங்களை கொண்டிருப்பதாக நம்பப்படும் அந்த மீன்பிடி வீடியோ பரவலாக பகிரபட்டு வருவது தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென மலேசிய விலங்குகள் நல சங்கமும், சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ தரப்பை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.