கோலாலம்பூர், பிப் 11 – மலேசியாவில் பணிபுரியும் நோக்கில் இந்தியாவை சேர்ந்த 33 தொழிலாளர்கள் முன் தினம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இந்நிலையில், இவர்களை அழைத்துச் செல்ல முதலாளி வராததால் அந்த தொழிலாளர்கள் தற்போது விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
‘இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக எங்களில் சிலர் ஜனவரி 14 திகதி அன்று மலேசியாவிற்கு வந்தோம். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தான் இங்குள்ள தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையில் வேலை இருப்பதாக சொன்னார். அப்போது நாங்கள் விமான நிலையத்தை அடைந்த போதும், இதே போல் முதலாளி வராததால் எங்களை மீண்டும் குடிவரவு அதிகாரிகள் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்’ என்று பாதிக்கப்பட்டவரான குமரேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவிற்கு திரும்புவதற்கு இவர்கள் சொந்த பணத்தை தான் பயன்படுத்தி திரும்பியுள்ளனர். இப்போது மீண்டும் சம்பந்தப்பட்ட அந்த 33 தொழிலாளர்களும் முன்தினம் மலேசியா நாட்டிற்கு வந்துள்ளனர்.
இம்முறையும் அவர்கள் ஏமாற்றபட்டு, அழைத்து செல்ல யாரும் இல்லாமல் KLIAவில் இருப்பதாக மலேசிய கினி, செய்தி வெளியிட்டுள்ளது.