![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-04-23-PM-7183.jpg)
பாரிட் புந்தார், ஜூலை 2 – மெட்ரிகுலேஷன் படிப்பிற்கான ஆட்சேர்ப்பு பட்டியலில் இருந்து, சிறந்த மாணவர்கள் விடுபட்டு போய்விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய, SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சு ஆய்வுச் செய்யும்.
தொடக்க கட்ட தேர்வில் மெட்ரிகுலேஷன் கல்வியைத் தொடர இடம் கிடைக்காத மாணவர்கள், மேல்முறையீடு செய்ய அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறியுள்ளார்.
நேற்று முதல், மெட்ரிகுலேஷன் கல்விக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியுள்ளது. ஜூலை ஐந்தாம் தேதி, மேல்முறையீடு செய்த மாணவர்கள், மேற்கல்வியை தொடர இணைவார்கள்.
SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சு பெற்றுள்ளது. அவர்களுக்கான இடங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படுமென, பட்லினா சொன்னார்.
8A அல்லது 9A பெற்ற மாணவர்கள் , மெட்ரிகுலேஷன் கல்வியிலிருந்து விடுபட்டு போய்விடக்கூடும் என கூறப்படுவது குறித்து, பட்லினா அவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னதாக, இனம் மற்றும் வட்டாரத்தை பொருட்படுத்தாது, SPM தேர்வில் 10A அல்லது அதற்கும் கூடுதலான A பெற்ற மாணவர்கள் அனைவருக்கும், இவ்வாண்டு தொடங்கி மெட்ரிகுலேஷன் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமென, நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.