
கோலாலம்பூர், ஜூன்-12-தாம் புத்துயிர் கொடுத்துள்ள ‘பார்த்தி பெர்சாமா மலேசியா’ (Bersama) கட்சிக்கு, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடினின் துணைவியார் தோ புவான் நய்மா நிதியுதவி அளிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் முக்கிய நிர்வாகி டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக் நேரலையில் விளக்கமளித்த அவர், இக்கட்சியின் தற்போதைய முதன்மை நிதியுதவியாளர் தம்மைக் தவிர வேறு யாரும் இல்லை என்றார்.
கடந்த மே 17-ஆம் தேதி நடந்த கட்சியின் தொடக்க விழாவுக்கான 30 ஆயிரம் ரிங்கிட் மற்றும் பூச்சோங்கில் உள்ள தலைமையகத்திற்கான 50 ஆயிரம் ரிங்கிட் முன்பணத்தையும் தமது சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமார் 27 ஆயிரம் மலேசியர்கள் ஆயுட்கால உறுப்பினர் கட்டணம், கட்சியின் நினைவுப் பொருட்கள் விற்பனை மற்றும் பொது நிதி திரட்டல் மூலம் இதுவரை 750,000 ரிங்கிட் வரை வழங்கியுள்ளனர்.
இந்த மக்கள் நிதியைக் கொண்டே கட்சியின் இதரப் பணிகள் இயக்கப்படுவதாக ரஃபிஸி தெளிவுப்படுத்தியுனார்.
“பெர்சாமா, அரசியல் சார்பு அபாயங்களைத் தவிர்க்க, எந்த ஒரு பெரிய நன்கொடையாளரை மட்டுமே சார்ந்திருப்பதைத் திட்டமிட்டு தவிர்க்கிறது” என அந்த முன்னாள் அமைச்சர் சொன்னார்.
தனது ஆதரவாளர்களுடன் பி.கே.ஆரிலிருந்து வெளியேறி ‘பெர்சாமா’ மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடர முடிவெடுத்துள்ள ரஃபிசிக்கு, வரும் ஜோகூர் – நெகிரி செம்பிலான் மாநில த் தேர்தல்கள் முதல் சோதனைக் களமாக அமையவுள்ளன.



