![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-15-Jun-2024-01-04-PM-9180.jpg)
கோலாலம்பூர், ஜூன்-15 – ஏராளமான சிங்கப்பூரியர்களின் வங்கிக் கணக்குகள் ஊடுருவப்படுவதற்குக் காரணமான மென்பொருள் மோசடி தொடர்பில் மலேசியாவில் கைதான இரு ஆடவர்கள், சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பன்னாட்டு விசாரணையின் பலனாக கைதான
26, 47 வயதுடைய அவ்விருவரும் இன்று சிங்கப்பூர் நீநிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
கடந்தாண்டு ஜூன் முதல் அம்மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கின்றனர்.
அவர்கள் இருவரும், பாதிக்கப்பட்டவர்களின் Android கைப்பேசிகளில் தீங்கிழைக்கும் APK செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன் மூலம் கைப்பேசியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச் செய்யும் சர்வரை (server) இயக்கியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த malware APK செயலியின் மூலம், மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசிகளின் உள்ளடக்கங்களை மாற்ற முடியும்.
அதன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளிலும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்விருவரின் இந்த நூதன மோசடியால், கடந்தாண்டு 1,899 பேர் சிங்கப்பூரில் ஏமாற்றப்பட்டனர்.
அவர்களின் மொத்த இழப்பு 3 கோடியே 41 லட்சம் சிங்கப்பூர் டாலர் என மதிப்பிடப்படுகிறது.
கணினி மென்பொருளை சட்டவிரோதமாக மாற்றியமைத்த குற்றத்திற்காக அவ்விருவருக்கும் அதிகபட்சமாக 50,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.