புத்ராஜெயா, பிப்ரவரி 27 – ஐந்தாண்டுகளுக்கு முன், 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், முன்னாள் லோரி உதவியாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
31 வயது கே.சத்தியராஜ் எனும் அவ்வாடவனுக்கு மேல்முறையீடு செய்ய தகுதி இல்லை என, அவனது மனுவை செவிமடுத்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒருமனதாக அறிவித்தது.
மரண தண்டனை விதிக்க இது பொருத்தமான வழக்கு. அதனால், சத்தியராஜ்க்கு உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிலைநிறுத்துவதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.
சத்தியராஜ்க்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு 26-ஆம் தேதி, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2019-ஆம் ஆண்டு, செப்டம்பர் 19-ஆம் தேதி, அம்பாங், ஜாலான் தாசிக் தம்பாஹானிலுள்ள, பிளாட் அடுக்குமாடி வீட்டில் கொள்ளையிடுவதற்காக அத்துமீறி புகுந்த சத்தியராஜ், அங்கிருந்த மூதாட்டியை கற்பழித்து கொலை செய்துள்ளான்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த மூதாட்டி உயிரிழந்தது, சவப்பரிசோதனை வாயிலாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.