![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-04-Jun-2024-07-40-PM-9231.jpg)
கோலாலம்பூர், ஜூன்-4, முகநூல் பயனர் ஒருவரின் பதிவு, தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சீங்கின் உத்தரவின் பேரிலேயே நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையம் MCMC மறுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபரின் முகநூல் பதிவு உண்மையானதாக இல்லை என்பதோடு மக்களைக் குழப்பும் வகையில் இருந்தது; தவிர Meta நிர்ணயித்துள்ள சமூக வழிகாட்டியை மீறும் வகையில் இருந்தது.
எனவே தான் அப்பதிவு நீக்கப்பட்டது; அதற்கும் துணை அமைச்சருக்கும் சம்பந்தமில்லை என, MCMC இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
சம்பந்தப்பட்ட முகநூல் பயனர், துணை அமைச்சரின் தலையீடு காரணமாகவே தனது அப்பதிவு நீக்கப்பட்டதாக ஜூன் 3-ஆம் தேதி புதியப் பதிவைப் போட்டுள்ளார்.
அவரின் அக்குற்றச்சாட்டு உண்மையல்ல என விளக்கிய MCMC, பெறப்பட்ட புகார்கள் அடிப்படையிலும், வழக்கமான SOP நடைமுறைகளைப் பின்பற்றியுமே அப்பதிவு நீக்கப்பட்டதாகக் கூறியது.
Asia Mobiliti குத்தகை விவகாரம் தொடர்பான தனது முகநூல் பதிவை Meta நீக்குவதற்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, பினாங்கைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் MCMC-க்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
மே 26-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அப்பதிவு, MCMC கேட்டுக் கொண்டதற்கிணங்கவே மலேசிய வாசகர்களுக்கு முடக்கப்பட்டதாக Shamsher Singh Thind கூறிக் கொண்டிருந்தார்.