புத்ரா ஜெயா, நவ 16 – குடிநுழைவுத் துறை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று விடியற்காலை 5 மணியளவில் புத்ரா ஜெயா வட்டாரத்தில் கூட்டாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவணங்களை கொண்டிருக்காத சுமார் 377 குடியேறிகளை கைது செய்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கையில் 110 க்கும் மேற்பட்ட பல்வேறு நிலைகளைச் சேர்ந்த குடிநுழைவு அதிகாரிகளும், சாலை போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த 40 அதிகாரிகளும் கலந்துகொண்டதோடு 600 வெளிநாட்டினரை அவர்கள் பரிசோதித்தனர்.
பல்வேறு குற்றங்களுக்காக 25 மற்றும் 55 வயதுக்குட்பட்ட 250 பெண்களும், 127 ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக ருஸ்லின் கூறினார். அவர்கள் வங்காளதேசம், நேப்பாளம், மியன்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் . காஜாங் மற்றும் பாங்கியிலிருந்து புத்ரா ஜெயாவுக்குள் நுழையும் பிரதான சாலையில் இரு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சாலை பரிசோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.