பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 – நாட்டின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான குட்இயர் (Goodyear), வரும் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, சிலாங்கூர், ஷா ஆலாமில் செயல்பட்டு வரும் அதன் தொழிற்சாலையை மூடவுள்ளது.
அதனால், அங்கு பணிப்புரியும் 550 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும், உருமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குட்இயர் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவர் நதானியேஸ் மதராங் தெரிவித்தார்.
அதோடு, நிறுவனத்தின் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்ட கால அடிப்படையிலான நலன்களை முன்னெடுத்துச் செல்ல அந்நடவடிக்கை முக்கியம் எனவும் நதானியேஸ் கூறியுள்ளார்.
எனவே, 1972-ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய ஷா ஆலாம் குட்இயர் தொழிற்சாலை, ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, இவ்வாண்டு இறுதிக்குள், கட்டங் கட்டமாக மூடப்படும்.
எனினும், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குட்இயர் டயர்கள் மலேசிய சந்தையில் தொடர்ந்து விற்பனையில் இருக்குமென நதானியேஸ் சொன்னார்.