10 கிலோ போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் சிக்கிய மலேசிய இளைஞன்

சிங்கப்பூர், ஆகஸ்ட்-5-சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், 10 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 22 வயது மலேசிய இளைஞர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி நிறுவனமான ICA வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வாகனம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதன் பின்புறப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் கஞ்சா மற்றும் மெத்தாம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ வகைப் போதைப்பொருளும் அடங்கும்.
அவற்றின் மொத்த எடை 10 கிலோவுக்கும் அதிகம் என்றும், சந்தை மதிப்பு சுமார் 361,000 சிங்கப்பூர் டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, குறிப்பிட்ட அளவை விட அதிகமான போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்துவது அல்லது இறக்குமதி செய்வது நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



