குவாலா கங்சார், மார்ச் 29 – பேராக், குவாலா கங்சாரில் புதிதாகத் திறக்கப்பட்ட மினி மார்கெட்டில் டின்களில் உள்ள சுவைபானங்கள் 99 சென்னுக்கும், ஒரு பேக்கேட் சீனியை 10 காசுக்கும் என அடிமாட்டு விலைக்கு விற்றதால், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை உட்படுத்திய மலிவு விற்பனை விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அக்கடையில் சோதனைச் செய்யப்பட்டதாக, உள்நாட்டு வாணிபம்-வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) குவாலா கங்சார் கிளை கூறியது.
கடைத் திறப்பு விழாவை ஒட்டி மார்ச் 16-ஆம் தேதி முதல் சலுகை விலையில் சுவைபான டின்களை அக்கடை விற்று வந்திருப்பது அம்பலமானது- அதுவும் 99 சென் என்ற விலைக்கு!
3 நாட்களுக்கு மேல் சிறப்பு மலிவு விற்பனைச் செய்ய விண்ணப்பம் செய்திருக்க வேண்டும் ; ஆனால் அதனைச் செய்ய அது தவறி விட்டது.
இது சட்டப்படி குற்றமாகும் என பேராக் KPDN இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதோடு, சீனி, சமையல் எண்ணெய், மாவு உள்ளிட்ட விலைக் கட்டுப்படுத்தப்பட்டப் பொருட்களை விற்பதற்கான CSA உரிமத்தையும் அது வைத்திருக்கவில்லை என்பதும் அம்பலமானது.
இதையடுத்து, சுமார் 200 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் சீல் வைக்கப்பட்டன என்றார் அவர்.