
புது டெல்லி, மே-8- இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் வட மற்றும் மேற்கு பகுதிகளில் 15 நகரங்களில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ஏவுகணைகளை அனுப்பியது.
ஸ்ரீ நகர், பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, சண்டிகர் உள்ளிட்டவை பிற இடங்களாகும்.
பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பதிலடியாக, லாகூர் உட்பட பல இடங்களில் உள்ள பாகிஸ்தானின் வான் தற்காப்பு ராடார்களையும் அமைப்புகளையும் இந்தியப் படைகள் குறிவைத்து செயலிழக்கச் செய்தன.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைப் போலவே “அதே களத்தில் அதே தீவிரத்துடன்” இந்தியப் படைகளின் பதிலடி இருந்ததை புது டெல்லி சுட்டிக் காட்டியது.
பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய வான் தற்காப்பு அமைப்புகள் எளிதில் முறியடித்தன.
பாகிஸ்தான் வான் தற்காப்பு அமைப்பை அழிக்க இந்தியாவால் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன; அதே சமயம் இந்தியா, தனது நகரங்களை குறிவைத்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழித்தீர்க்கும் வகையில் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா முன்னதாக அத்தாக்குதலை மேற்கொண்டது.
அதில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்