புத்ரா ஜெயா, நவ 10 – மலேசிய இந்தியர்களின் உருமாற்ற பிரிவான மித்ரா
2024 ஆம் ஆண்டில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் என அதன் சிறப்புக் குழுவின் தலைவரான டத்தோ R .ரமணன் தெரிவித்திருக்கிறார். சுகாதார நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார், எதிர்காலத்தில் சமூகத்தை முறையாக மேம்படுத்துவதற்கு கல்வி முக்கியமாகும். ஒருவருக்கு உண்பதற்கு மீன் கொடுப்தைவிட மீன் எப்படி பிடிப்பது என்பதை கற்றுத்தந்தால் எதிர்கால தலைமுறைக்கும் அவர் அதனை கற்றுத்தர முடியும் என்ற அடிப்படையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கையில் அடுத்த ஆண்டு மித்ரா கவனம் செலுத்தும் என இன்று காலை மித்ரா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரமணன் கூறினார்.
கல்விக்கு முன்னுரிமை வழங்கும் மித்ராவின் முயற்சிகள் நாடு முழுவதிலும் கட்டம் கட்டமாகவோ அல்லது ஏககாலத்தில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். மடானி கோட்பாட்டின் கீழ் வளர்ச்சியின் நீரோட்டத்திலிருந்து எவரும் பின் தங்கிவிடமாட்டார்கள் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே தெளிவாக கூறியிருப்பதையும் ரமணன் கூறினார்.
உயர்க்கல்வி நிலயங்களில் பயிலும் தகுதிபெற்ற 10,000 இந்திய மாணவர்களுக்காக மித்ரா வழங்கும் நிதியுதவியில் கிட்டத்தட்ட 7,000 மாணவர்களுக்கு ஏற்கனவே 13.96 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுவிட்டதாக ரமணன் கூறினார். ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் 2,000 ரிங்கிட் உதவி தொகையை எஞ்சிய 3,000 மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரமணன் தெரிவித்தார். இதனிடையே டத்தோ ரமணன் தலைமையில் செயல்படும் மித்ரா இப்போது புதிய தோற்றத்துடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருவதாக மித்ரா பணிக்குழுவின் புதிய உறுப்பினரான RSN ராயர்தெரிவித்தார்.