கோலாலம்பூர், நவ 2 – எதிர்காலத்தில் மிகப்பெரிய தொழில் துறையாக மாறவுள்ள EV எனப்படும் மின்சார கார் பழுதுபார்க்கும் துறையில் இந்திய இளைஞர்கள் இப்போது தொடங்கியே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மித்ரா 250 இந்திய இளைஞர்களுக்கு அத்துறையில் பயிற்சி வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
2.875 மில்லியன் ரிங்கிட்டில் SG Education நிறுவனத்தின் கீழ் இப்பயிற்சி திட்டம் வழங்கப்படுகிறது என இன்று அந்நிறுவனத்தில் பயிற்சியின் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டா மித்ரா சிறப்பு செயற்குழுவின் தலைவர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் மலேசியாவில் தனது தளத்தை ஏற்படுத்தியிருப்பது மலேசியாவில் மின்சார கார் பழுதுபார்ப்பு துறைக்கான தேவையை அதிகரிப்பதோடு இவ்வாட்டாரத்தின் மையமாகவும் மலேசியா திகழும் என ரமணன் கூறினார்.
அவ்வகையில் இந்திய இளைஞர்கள் இத்துறையின் வாய்ப்புகளை அறிந்து தங்களின் தொழில் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றார் ரமணன்.
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய 4 இடங்களில் இப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக SG Education நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ ஶ்ரீ கணேஷ் தெரிவித்தார்.
இது உண்மையிலேயே மிகவும் பயனுள்ள திட்டம். எதிர்காலத் தேவைக்கு ஏற்ப இந்த பயிற்சி திட்டம் அமைந்துள்ளது. எங்களைப் போல பலரும் இதன் வழி பயன்பெற வேண்டும் என கூறுகின்றனர் இதில் பங்குபெற்றுள்ள இளைஞர்கள்.
தொழில் புரட்சிக்கு ஏற்றவாறு தொழில் திறனுக்கான தேவையும் வாய்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்படி புதிதாக உருவாகியுள்ள துறைதான் இந்த EV எனும் மின்சார கார் பழுதுபார்க்கும் துறை.
இந்திய இளைஞர்கள் இத்துறையில் முன்னோடிகளாக உருவாக இதுபோன்ற பயிற்சி திட்டங்கள் நல்ல சந்தர்ப்பமாக அமைகின்றன.
அதனை தவறாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு.