![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-04-Jul-2024-04-57-PM-5667.jpg)
கோலாலம்பூர், ஜூலை 4 -கடந்த ஆண்டு எஸ்.பி எம். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மெட்ரிகுலேசனில் 1,400 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக மலேசிய ஆகம அணி உட்பட இந்தியர்களை பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற இயக்கங்கள் தெரிவித்தன. இந்திய மாணவர்களுக்கு குறைந்தது 2,500 இடங்கள் வழங்கப்பட வேண்டும் என ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார். 10 ஏ மற்றும் அதற்கு கூடுதல் ஏக்களை எடுத்த மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக மெட்ரிகுலேசன் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்ததை நாங்கள் வரவேற்றாலும் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிகை தேவையென இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அருண் துரைசாமி தெரிவித்தார். ஆகக் கடைசியாக டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக இருந்த காலத்தில் 2017 ஆம் ஆண்டு 2,162 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை தொடந்து குறைந்து வருகின்றன.
நாட்டில் இந்தியர்களின் பட்டதாரி விகிதம் ஆண்டுதோறும் 9 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்து வருகிறது . மெட்ரிகுலேசன் கல்லூரிகளில் இன்று 40,000 பேர் பயில்கின்றனர். அப்படியிருக்கும்போது 2.500 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த விருப்பமாக இருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார். மேலும் இந்திய மாணவர்களில் பலர் 9 பாடங்களை மட்டுமே எடுத்துள்ளனர். எனவே 9 ஏ எடுத்திருக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த செய்தியாளர் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளி கல்வி இயக்கத்தை சேர்ந்த வெற்றி வேலன், மலேசிய தமிழ் சங்கத்தின் டாக்டர் குமரவேல், மலேசிய தமிழ் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களை சேர்ந்த டத்தோ ஆர்.ஆர்.எம் கிருஷ்ணன் , நெகிரி செம்பிலான் இடைநிலைப் பள்ளிகளின் தமிழாசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.