கோலாலம்பூர் , பிப் 20 – இனம்-சமயம்-மொழி-பண்பாட்டுக் கூறுகளால் நல்லிணக்கத்துடன் வாழும் பல இனங்களைக் கொண்ட மலேசிய மக்களிடையே அவ்வப்போது சலசலப்பையும் பூசலையும் சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ரித்துவான் தீ மீண்டும் இந்து சமயத்தில் தேவையில்லாத சர்சையை ஏற்படுத்த முயற்சிப்பதை மலேசிய இந்து சங்கம் கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாக அதன் தலைவர் தங்க . கணேசன் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் குறித்த தரவும் பதிவும் எங்களிடம் ஆதாரப்பூர்வமாக உள்ள நிலையில், மூன்று லட்ச இந்துக் கோயில்கள் நாட்டில் இருப்பதாகவும் இது, நாட்டில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லாமல் அதிக அளவில் இருப்பதாகவும் பொய்க் கணக்கையும் பொருந்தா கருத்தையும் ரித்துவான் தீ கூறியிருப்பதாக தங்க கணேசன் தெரிவித்தார்.
ஒரு சமயத்தை வழிவழியாகப் பின்பற்றி வருபவர்கள், பொதுவாக மற்ற சமயத்தினரை மதிக்கும் பண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். திடீரென இடையில் மதம் மாறிய ரித்துவான் தீ போன்ற ஒரு சில பேர்வழிகளால் தான் சமய சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் இதுபோன்ற தீயக் கருத்துகளைக் கூற முடியும். அவர் மூன்று இலட்சம் இந்துக் கோயில்களுக்கான ஆதாரத்தைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.