
பாட்னா , ஜூன்-3-35 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்ட மீறல் வழக்கில், 85 வயதான தீப் ராய் என்ற முதியவருக்கு பீகார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
அந்த ஆடவரை கைது செய்து சிறைக்கு கொண்டுச் செல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
குற்றவாளி தீப் ராய் முதுமை காரணமாக உடல் ரீதியாக முற்றிலும் இயலாமை நிலையில் உள்ளார்.
சிறையில் கடுமையான தண்டனையை அவரால் தாங்க முடியாது என்று கூறுவது தவறாகாது, ஆனால் அதே நேரத்தில் அவரைத் தண்டிப்பது அவசியம், எனவே, மனிதாபிமான அடிப்படையில், நீதிமன்றம் குறைந்த தண்டனையை பரிசீலித்ததாக கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மானோஜ் குமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதோடு குற்றவாளிக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 62 வயதான நகேஷ்வர் ராய், 60 வயதான நரேஷ் ராய், 59 வயதான உத்கேஷ்வர் ராய் மற்றும் 50 வயதான ஜகதீஷ் ராய் ஆகிய இதர நான்கு குற்றவாளிகளுக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவர்கள் அனைவரும் மே 26ஆம்தேதியன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 2 ஆம்தேதி தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தீப் ராய் உட்பட எழுவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களில் இருவர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டதால் வழக்கின் முடிவில் ஐவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.



