![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/court.png)
கோலாலம்பூர், ஜூன்-29 – தங்களின் 6 வயதுப் பெண் பிள்ளை மரணமடையும் அளவுக்கு வளர்ப்பில் அலட்சியம் காட்டி துன்புறுத்தியதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை, கணவனும் மனைவியும் மறுத்துள்ளனர்.
செராஸ், தாமான் மூலியாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இல்லத்தரசியான 26 வயது ஃபாத்தின் அஃப்ரீனா அப்துல்லா (Fatin Afrina Abdullah) மற்றும் e-hailing ஓட்டுநரான முஹமட் ஃபுவாட் ஜமாலுடின் (Muhamad Fuad Jamaluddin) மீது சிறார் சட்டம், குற்றவியல் சட்டம் என இரு பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆளுக்கு 15,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பெற்றோரின் சித்ரவதையாலும் அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது உயிரிழந்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
குறைப்பிரசவத்தில் பிறந்து, போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் வளர்ந்து பல்வேறு உடல்நலக் கோளாறுக்கு அப்பிள்ளை ஆளாகியிருந்தது சவப்பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டது.