![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-05-48-PM-5182.jpg)
காஜாங், ஜூன் 6 – 17 மாத பெண் குழந்தையிடம், காயம் ஏற்படும் அளவுக்கு கடுமையாக நடந்து கொண்டதாக, பராமரிப்பாளர் ஒருவருக்கு எதிராக இன்று சிலாங்கூர், காஜாங் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
நீதிபதி முன்னிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, 24 வயது நோர் அயின் இஸ்மாயில் எனும் அந்த பராமரிப்பாளர், அதனை ஒப்புக் கொண்டார்.
எனினும், மருத்துவ அறிக்கைகாக காத்திருப்பதால், இவ்வழக்கு ஜூலை இரண்டாம் தேதி செவிமடுக்கப்படுமென, நீதிபதி அறிவித்தார்.
தற்போது எட்டு மாதம் கர்ப்பிணியான அயின், தனது பராமரிப்பில் விடப்பட்ட 17 மாத குழந்தைக்கு வேண்டும் என்றே காயம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக, குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மே 28-ஆம் தேதி, மாலை மணி 4.15 வாக்கில், பண்டார் மக்கோத்தா செராஸில் அந்த குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அந்த பராமரிப்பாளரை விடுவிக்க நீதிபதி இன்று அனுமதி வழங்கினார்.
முன்னதாக, காஜாங், பண்டா மக்கோத்தா செராசிலுள்ள, சிறார் பராமரிப்பு மையத்தில், 17 மாத பெண் குழந்தை ஒன்று சித்திரவதைக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, கடந்த திங்கட்கிழமை போலீசார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.