
ஈப்போ, மே-19 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகளின் தேசியப் பொதுப் பேரவையைத் தாம் திறந்து வைத்து உரையாற்றப் போவதில்லை என்பதை, கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
அம்முடிவு இறுதியானது; எனவே வேறு யாரையாவது வைத்து மாநாட்டினை திறந்து வைத்துக் கொள்ளுமாறு, கட்சித் தலைமையை அவர் கேட்டுக் கொண்டார்.
தமது அவ்விருப்பத்தை கடிதம் வாயிலாக கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும், அந்த பொருளாதார அமைச்சர் சொன்னார்.
“நான் இருவருக்கு மட்டுமே அக்கடிதத்தை அனுப்பினேன்; ஒன்று தலைவர் இன்னொன்று பொதுச் செயலாளர்; ஆக இரகசியம் காக்கப்பட்ட வேண்டிய கடிதத்தின் உள்ளடக்கம் வெளியே கசிந்தது எப்படி? யார் அதை கசிய விட்டது?” என ரஃபிசி கேட்டார்.
உதவித் தலைவர்களான நூருல் இசா அன்வாரையோ அல்லது சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியையோ அனுப்புங்கள்; எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்றார் அவர்.
மகளிர் – இளைஞர் பிரிவு மாநாடுகளை, கட்சியின் துணைத் தலைவர் தொடக்கி வைப்பது, பி.கே.ஆர் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் பரவலாகக் கடைபிடிக்கப்படும் பாரம்பரியமாகும்.
இந்நிலையில், ஜோகூர் பாருவில் மே 22-ஆம் தேதி நடைபெறும் பி.கே.ஆர் இளைஞர் – மகளிர் பிரிவு மாநாடுகளை ரஃபிசி திறந்து வைக்கப் போவதில்லை என கடந்த சில நாட்களாவே புரளி கிளம்பியிருந்தது.
இன்று அவரே அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
துணைத் தலைவர் பதவிக்கு ரஃவிசிக்கும், நூருல் இசாவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.