
குவாந்தான், மே 26- சமூக வலைத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டு, 60 வயது மாது ஒருவர் தனது சேமிப்புப்பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கிய பணம் என மொத்தம் 695,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
காப்பீட்டு நிறுவனமொன்றில் மேலாளராக பணிபுரியும் அப்பெண், சந்தேக நபர் வழங்கிய வங்கி கணக்குக்கு, 22 முறை மொத்த பணத்தையும் செலுத்தியிருப்பதாக பகாங் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் தெரிவித்துள்ளார்.
900 ரிங்கிட் ஆரம்ப இலாபத்தைப் பெற்ற பிறகு, வேறு எந்த பணத்தையும் திரும்ப பெறாத நிலையில், சந்தேகமுற்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வழக்கு மேற்கொண்டு விசாரிக்கப்படுவதோடு, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.