
கோலாலம்பூர், ஜூன்-3 – கேமரன் மலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பஹாங் மாநில அரசும் மத்திய அரசாங்கமும் உடனடியாக, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா அதனை வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு பொது விடுமுறையிலும், ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் நீண்ட நேரம் – சில நேரங்களில் பாதிநாள் வரை – நெரிசல்களில் சிக்கிக்கொண்டு செல்கிறார்கள்.
இது அவர்களுடைய திட்டங்களை பாதிப்பதோடு அல்லாமல், சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
இதனாலேயே பலர் கேமரன் மலைக்கு வருவதையே தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
ஹோட்டல் தொழில்துறையை இது மிகவும் பாதித்திருப்பதாக தமக்குப் புகார்கள் கிடைத்திருப்பதையும் முருகையா சுட்டிக் காட்டினார்.
அதிகமான முன்பதிவுகள் இரத்தாகின்றன; வியாபாரிகளும் வாடிக்கையாளர்கள் இன்றி சிரமப்படுகின்றனர்.
சுற்றுலா வருவாய் மீது இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, புதிய மாற்று சாலை திட்டத்தை தயார் செய்வது, தற்போதுள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளை அமுல்படுத்த அவர் பரிந்துரைத்தார்.
அதோடு மக்கள், சுற்றுலா தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளுடன் நேரில் ஆலோசனை நடத்தி, கருத்துகளையும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.