
ஜெராண்டூட், ஜூன்-7 – பஹாங், ஜெராண்டூட்டில் 2 வயது ஆண் குழந்தையின் வலது கண்ணை பென்சில் பதம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை வீட்டு சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 26 வயது தாய், வரவேற்பறையில் மகனையும் உறவினர் பையனையும் விளையாட விட்டிருந்தார்.
விளையாடுவதற்காக படம் வரையும் புத்தகத்தையும் பென்சிலையும் மகனிடம் அவர் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் மகன் வீர் வீர் என கத்த, சமையலறையிலிருந்து ஓடி வந்த தாய் அதிர்ந்துபோனார்.
பென்சில் குத்தியதில் அவனது வலது கண் சிவந்தும் வீங்கி போயும் இருந்தது.
இதையடுத்து முதலில் கிளினிக்கிற்கும் பின்னர் ஜெராண்டூட் மருத்துமனைக்கும் குழந்தையைக் கொண்டுச் சென்றனர்.
சேதமடைந்த வலது கண் பார்வையை மீட்டெடுக்கவும் காயத்திற்கு சிகிச்சையளிக்கவும் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.