
புது டெல்லி, ஜூன்-7 – சிவ பெருமானைப் பின்பற்றினால் ஒட்டுமொத்த உலகமும் நன்மையடையும் என, இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள உலகக் கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கின் தந்தை இரோல் மாஸ்க் கூறியுள்ளார்.
“நான் சமய அறிஞர் அல்ல; ஆனால் இந்து மதம் எனக்கு மிகவும் பிடித்துபோய் விட்டது” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பழைமைவாய்ந்த இந்து மதமும் சிவனைப் பற்றிய ஞானமும் தம்மை உண்மையிலேயே மலைக்க வைப்பதாகவும் இரோல் மாஸ்க் புகழாரம் சூட்டினார்.
இந்து மதத்தின் ஆழமும் வரலாறும் நாம் கற்றது கையளவே என்பதை உணர வைப்பதாகவும் அவர் சொன்னார்.
பாரம்பரியமும் ஆன்மீகமும் இன்னமும் கட்டிக்காக்கப்படுவதால் தான் என்னமோ பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா உலகளவில் மாபெரும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறதோ என்றார் அவர்.
இவ்வேளையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்குச் சென்றதை, தமது வாழ்நாளில் தாம் செய்த மிக சிறந்த செயல்களில் ஒன்றாகவும் அவர் வருணித்தார்.
புதன்கிழமை அங்கு சென்றது ஓர் அற்புதமான அனுபவம் என்றார் அவர்.
அக்கோயில் முழுமைப் பெறுவதைக் காண தமக்கு இருப்புக் கொள்ளவில்லை எனக் கூறிய இரோல் மாஸ்க், உலக அதிசயங்களில் ஒன்றாக அது விளங்கப்போவதாக பாராட்டினார்.
நேற்றோடு தனது ஒரு வார கால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்ட இரோல் மாஸ்க், தாஜ்மகால் மட்டும் செல்ல இயலாமல் போனதாகத் தெரிகிறது.
அட்டவணையில் இருந்தாலும் ஆக்ராவில் தற்போது நிலவும் அதீத வெப்பநிலையால் அது தவிர்க்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.