
கோலாலம்பூர், ஜூன்-7 – கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, ஜூன் 9 முதல் 15 வரை பரீட்சார்த்தமாக ஜாலான் ராஜா சாலையை பாதியாக மூடவிருக்கிறது.
சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்திற்கு முன்னால், ஜாலான் துன் பேராக் சந்திப்பிலிருந்து தொடங்கி ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சந்திப்பு வரை மூடப்படுவதாக DBKL ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதசாரிகளுக்கு ஏற்ற மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகர மையத்தை உருவாக்குவதற்கான DBKL-லின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மூடல் அமைகிறது.
ஜாலான் ராஜாவின் பகுதியளவு மூடல் பாதசாரிகளுக்கு, குறிப்பாக குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரந்த மற்றும் பாதுகாப்பான இடங்களை வழங்கும்.
இந்தக் காலகட்டத்தில், வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதிச் செய்வதற்காக போக்குவரத்து மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அவ்வகையில் ஜாலான் ராஜாவிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் ஜாலான் துன் பேராக்கிற்கு வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படும்.
இருப்பினும், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் ஜாலான் துன் பேராக்கிலிருந்து வரும் வாகனங்கள் ஜாலான் ராஜாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
அம்மாற்றங்கள் தொடர்பில் வாகனமோட்டிகளுக்கு உதவ, திசை அடையாள பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்; அதோடு தளத்தில் அமுலாக்கப் பணியாளர்களும் இருப்பார்கள் என DBKL கூறிற்று.
அதே காலகட்டத்தில், சாலை மூடல் காரணமாக Go-KL மற்றும் RapidKL Hop On Hop Off பேருந்து வழித்தடங்கள் தற்காலிக மாற்றங்களுக்கு உட்படும்.
எனவே பயணிகள் புதுப்பிக்கப்பட்ட பாதை மற்றும் நிறுத்தத் தகவல்களுக்கு அந்தந்த சேவை வழங்குநர்களிடம் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.