
லாஹாட் டத்து – ஜூன்-8 – சபா மாநிலத்தின் லாஹாட் டத்துவில் புதிதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இன்று மகா கும்பாபிஷேகம் கண்டது.
திருப்பணிகள் முடிந்து இன்று காலை விமரிசையாக நடைபெற்ற திருக்குட நன்னீராட்டில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் திரளாக பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.
சபா முன்னாள் முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ யோங் தெக் லீ சிறப்பு வருகை மேற்கொண்டு கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு சேர்த்தார். ஒரு சீக்கிய நல் நெஞ்சர் நன்கொடையாக தந்த 2.5 ஏக்கர் நிலத்தில், கடல் மட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சபாவில் இந்துக்கள் குறைவாக இருந்தாலும், மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, சரவாக் மற்றும் மேற்கு மலேசியாவிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு சேர்த்ததாக, ஆலயத் தலைவரான ‘Cikgu Ravi’ எனப்படும் ரவி வேலன் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் ஒரே அம்மன் கோயிலாக இப்புதிய ஆலயம் விளங்குகிறது.