
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த வியாழக்கிழமை தொடங்கி சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அரசு சாரா அமைப்பொன்று (NGO) பொது நன்கொடைகளில் சுமார் 26 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
நன்கொடை நிதி தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டு நகைகள், கார்கள், நிலம், வீடுகள் போன்றவைகளை வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளதென்று MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் தற்போது ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்காக கிட்டத்தட்ட 14 வங்கிக் கணக்குகளை MACC முடக்கியுள்ள நிலையில் இந்த வழக்கு குற்றவியல் நம்பிக்கை மோசடி தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.