
பிரிக்ஃபீல்ட்ஸ், ஜூன் 28 – இன்று காலை 8 மணியளவில் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில், தமது வாழ்நாள் முழுவதும் பல மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி எனும் தீபத்தை ஏற்றி வைத்த டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம்.தம்பிராஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.
அன்னாரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, அவரது சாதனைகளை முன்னிலைப்படுத்தி, டாக்டர் தம்பிராஜாவின் மாணவர்கள், ஸ்ரீ முருகன் நிலையத்தின் (SMC) முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட இந்த பிரார்த்தனையில் கலந்துக்கொண்டுள்ளனர்.
டாக்டரின் மூத்த மகள், டாக்டர் சுமித்ரா அவர்கள் தமக்கும் தனது தந்தைக்கும் இடையிலான அழகான தருணங்களையும், இந்திய சமூகத்தின் பால் அவருக்கிருந்த அக்கறையையும் வந்திருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் அன்னாரின் உயிர் மூச்சாய் இருந்த ஸ்ரீ முருகன் நிலையத்தின், தற்போதைய இயக்குனர் திரு. சுரேன் கந்தா அவர்கள் மறைந்த டாக்டர் தம்பிராஜாவின் சாதனைகளையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொண்ட அதே வேளை SMC நிலையத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டங்களையும் நினைவஞ்சலியில் கலந்துக்கொண்டவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளார்.
அவரது உடலுக்கு மட்டுமே மரணமே தவிர, கல்வி எனும் யாகத்தில் தம்மை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு மாணவர்கள் மத்தியிலும் டாக்டர் எம். தம்பிராஜா எனும் சகாப்தம் வாழ்ந்து கொண்டிருப்பார்.