
ஜகார்த்தா, அக்டோபர் 25 – இந்தோனேசிய சர்வதேச விமான நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய 61 மலேசிய மாணவர்களுக்கு மலேசிய தூதரகம் உடனடி உதவி வழங்கியுள்ளது.
மாணவர்களை வரவேற்க வேண்டியிருந்த உள்ளூர் பயண முகவர் வராததால் இந்தச் சூழ்நிலை ஏற்பட்டது.
அத்தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே தூதரகம் உடனடி நடவடிக்கை எடுத்து, அருகிலுள்ள ஹோட்டலில் தங்கும் வசதியையும் போக்குவரத்தையும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தது.
இதனிடையே மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களின் கல்விச் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும் மலேசிய தூதர் டத்தோ ஷெட் முகமட் ஹஸ்ரின் (Syed Mohamad Hasrin) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மலேசிய பயண நிறுவனம் இன்று ஜகார்த்தாவிற்கு வந்து பிரச்சினையைத் தீர்க்கும் எனவும், தூதரகம் மாணவர்கள் நாடு திரும்பும் வரை நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



