‘Salak Selatan’-இல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடிய ஆசிரியை; துரத்தி வந்து காரில் மோதிய கொடூர கணவன்

கோலாலம்பூர், டிசம்பர் 8 – கோலாலம்பூர் ‘Salak Selatan’ பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை ஒருவர், கணவணின் அடி உதைகளுக்கு பயந்து, குப்பையை வீசப் போவதாக கூறி, வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் கணவனால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த அந்த ஆசிரியை, வாய்ப்பு கிடைத்ததும் குப்பை எறிவதற்காக வெளியே போகிறேன் என்று சொல்லி தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Aidil Bolhassan கூறியுள்ளார்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் அவ்விடத்திற்கு வந்து, அவரைக் காரில் கூட்டிச் செல்ல முற்பட்டுள்ளார். ஆனால் இதனைக் கண்ட அப்பெண்ணின் கணவன், தனது காரில் அவர்களைத் துரத்தத் தொடங்கினான்.
Jalan Kampung Pasir Pantai Dalam வரை ஆசிரியர் சென்ற காரைத் துரத்தி சென்ற அந்நபர் 2 முறை அக்காரை மீண்டும் மீண்டும் மோதியுள்ளான். ஆனால் இறுதியில் Setiawangsa Pantai Expressway நெடுஞ்சாலை வழியாக அவர்கள் தப்பித்துச் சென்றனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தங்களின் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



