
கோலாலாம்பூர், மார்ச்-2-அண்மைய காலமாக அதிகரித்து வரும் மத சம்பந்தப்பட்ட விவாதங்கள் குறித்து, JK Harmoni எனப்படும் சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாம், புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம், தாவோ மற்றும் பஹாய் சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பிரதிநிதிகளும் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான 3R விவாதங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எந்தவோர் அவமதிப்பும், சினமூட்டுதலும் அல்லது மதத்தை இழிவுபடுத்தும் செயல்களும் அனுசரிக்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
எனவே, ,இவ்விவகாரத்தில் போலீஸ் மற்றும் மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு JK Harmoni முழு ஆதரவு வழங்குகிறது.
மத ஒற்றுமையும் சமூக அமைதியுமே, மலேசியாவின் வலிமை என்றும், அதை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், மரியாதை, புரிதல் மற்றும் கலந்துரையாடல் மூலமே தீர்வு காண வேண்டும்” என்றும் அக்குழு அழைப்பு விடுத்துள்ளது.



