
கோலாலம்பூர், மார்ச்-4-“தவறு என்றால் தவறே. சட்டத்தை மீறி யாரும் இல்லை”
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர்ஆனை அவமதித்ததாகவும், சமூக ஊடகங்களில் அவமரியாதையான பதிவுகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சம்பந்தப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அம்மாணவர் கடந்த ஏப்ரல் மாதமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் என்ற தகவல் சில நாட்களுக்கு பின்னரே வெளிவந்தது என்பதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அது வெளிவரும் வரை, குறிப்பிட்ட சமயத்தாரை நோக்கி ‘அம்புகள்’ பாய்ந்தன. அவர்களின் நம்பிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டன.
அம்மாணவர் இஸ்லாத்தைத் தழுவியது உண்மையென்றால், ஆரம்பத்திலேயே அது தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி செய்திருந்தால் சமூக ஊடகத்தில் சண்டைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
இந்நிலையில், இனம், மதம் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் தவறு செய்தவர் சட்டத்தின் முன் பொறுப்பேற்றே ஆக வேண்டும் என்று சிவகுமார் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், இளைஞர்களும் சமூக ஊடகங்களில் _’likes’_ வாங்குவதற்கும் அல்லது பிரபலத்துக்காகவும் மதம், இனம் மற்றும் அரசியல் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



