
சிரம்பான், மார்ச் 5 – சிரம்பானில் 48 மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லலப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பிராணிகள் மீட்பு அமைப்பான FurryKids Safehaven தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 26 ஆம் தேதி இஸ்தானா உணவளிக்கும் பகுதிக்குப் பின்னால் முதல் சம்பவத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் நாயும் பல பறவைகளும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டதா என்ற உடனடி கவலையை எழுப்பியது. மறுநாள் பிப்ரவரி 27ஆம் தேதியன்று விஷம் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்ட நாய்க் குட்டி உட்பட ஐந்து நாய்கள் இறந்த வேளையில் உயிர் பிழைத்த நாய்கள் வாயில் நுரை, இரத்த வாந்தி, விரைவான உடல் நலக் குறைவு உள்ளிட்ட விஷத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைக் காட்டின.
அந்த இரு சம்பவங்களிலும் மொத்தம் 11 நாய்கள் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டன. இச்சம்பவங்கள் குறித்து கால்நடை சேவைகள் துறையிடம் முறையாக புகார் அளித்துள்ளதாக Furrykids Safehaven அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இருப்பினும், நேரடி சாட்சிகள் மற்றும் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் இல்லாததாலும் இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கை இல்லை (NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



