
கோலாலம்பூர், மார்ச்-11-நாட்டில் அண்மையக் காலமாக இன-மத பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதியையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்து அமைப்புகளையும் சில முஸ்லீம் தனிநபர்களையும் தொடர்புபடுத்திய பொது விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் குறித்து பாஸ் கவலைகொள்வதாக, அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இன – மத அடையாளம் மற்றும் வழிபாட்டு தலங்களை உட்படுத்திய பிரச்னைகள் மலேசியாவின் பல்லின சமூக அமைப்பை கருத்தில் கொண்டு விவேகத்துடனும் கவனமான அணுகுமுறையுடனும் கையாளப்பட வேண்டும் என்றார் அவர்.
சமூகங்களுக்கிடையில் சந்தேகம், வெறுப்பு அல்லது பகையை தூண்டும் வகையில் இந்த பிரச்னைகளை சித்தரிப்பது மிகவும் பொறுப்பற்றச் செயலாகும்.
அது அனைத்து தரப்பினராலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் பாஸ் வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.
தவிர, இத்தகைய பதற்றங்களை கையாளும்போது அதிகாரிகள் விரைவாகவும் வெளிப்படையாகவும், எந்த பாரபட்சமுமின்றியும் செயல்படுவது மிகவும் முக்கியமாகும்.
சுருக்கமாகச் சொன்னால், நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேணுவது அனைவரின் பொறுப்பாகும்; அரசியல்வாதிகள் முதற்கொண்டு அமைப்புகள் ஊடகங்கள் வரை பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தாக்கியுடின் கேட்டுக் கொண்டார்.



