
சென்னை, மார்ச்-12-திரையரங்குகளுக்கு வந்த புதிய படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே OTT தளத்தில் வெளியிட வேண்டும் என, தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது, பெரும்பாலான படங்கள் நான்கே வாரங்களில் OTT-க்கு வந்து விடுகின்றன; இதனால் வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்கள் சென்றுவிடுவதால், திரையரங்கிற்கான மக்களின் வருகைக் குறைவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
சிறிய பட்ஜெட் படங்களும், வெற்றி பெற்ற படங்களும் கூட இரண்டாம் வாரத்திற்குப் பிறகு வருமானத்தில் வீழ்ச்சி காணப்படுவதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே, 8 வார பெரிய இடைவெளி என்பது, மக்களைத் திரையரங்கிற்கு உந்தச் செய்து, திரையரங்குகளின் வருமானம் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதாக அச்சங்கம் நம்புகிறது.
ஆனால், 8 வார OTT இடைவெளி அமுல்படுத்தப்பட்டால், OTT ஒப்பந்தங்கள் குறைந்து, தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
என்றாலும், OTT வருமானம் குறைந்தாலும், திரையரங்கு வருகை அதிகரிப்பதால், மொத்தத்தில் திரைப்படத் துறைக்கு நன்மை ஏற்படும் என நம்பப்படுகிறது.



