
வாஷிங்டன், மார்ச்-29-ஈரான் மீதான போரில் இதுநாள் வரை வான் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த அமெரிக்கா, தற்போது தரைப்படைகளை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சான Pentagon, ஈரானுக்குள் அமெரிக்கக் கடற்படை உள்ளிட்ட படைகளைக் களமிறக்கும் பல்வேறு இராணுவத் திட்டங்களை ஆய்வு செய்து வருகின்றன.
ஆனால் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என, Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டே, தூதரக பேச்சுவார்த்தைகளையும் ஒரு தேர்வாகவே வைத்திருக்கிறது.
இதனிடையே, போர் பதற்றம் கல்வி துறையிலும் பரவியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC, அண்மையத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் மீது குறி வைக்கப் போவதாக எச்சரித்துள்ளது.
எனவே, மாணவர்களும் பணியாளர்களும் அந்த வளாகங்களிலிருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தூரம் விலகி இருக்க வேண்டும் என அது அறிவுறுத்தியுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி (Houthi) படைகள், இஸ்ரேலை குறிவைத்து இரண்டாம் கட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லா தரப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும் என்றும் ஹூதிகள் எச்சரித்துள்ளனர்.
மொத்தத்தில், இந்த ஆகக் கடைசி சம்பவங்கள்… வளைகுடாவில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதை காட்டுகின்றன.



