
வாஷிங்டன், ஏப்ரல்-26-வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தின் போது திடீரென துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் மனைவி மெலானியா ட்ரம்ப் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளால் மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
உயர் மட்ட அதிகாரிகள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
ஏராளமான விருந்தினர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேசைகளுக்கு அடியில் ஒளிந்துகொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் அதிபருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கேட்டது உண்மையிலேயே துப்பாக்கிச் சத்தம் தானா? அது எங்கிருந்து வந்தது என்பன போன்ற தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், ஈரானுடனான தூதரக உறவில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த அமெரிக்க தூதர்களின் பயணத்தை ட்ரம்ப் அதிரடியாக இரத்துச் செய்த 10 நிமிடங்களிலேயே, ஈரான் ஒரு புதிய மற்றும் சிறந்த ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தற்போது வலுவான நிலையில் உள்ளது.
ஈரான் தான் இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு புதிய அவசரத்தைக் காட்டுவதாகவு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.



