
பவரியா, ஏப்-28- அண்மையில் எகிப்தில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்தபோது, பாம்பு நடன நிகழ்ச்சியை பார்க்க வந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவரின் கால்சட்டைக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு தீண்டியதில் அவர் உயிரிழந்தார்.
இம்மாத தொடக்கத்தில் செங்கடலில் அமைந்துள்ள பிரபலமான கடற்கரை நகரமான ஹுர்கடாவில் (Hurghad ), உள்ள ஒரு ஹோட்டலில், 57 வயதான அந்த நபர் தனது குடும்பத்துடன் பாம்பு நடன நிகழ்ச்சியை பார்க்க வந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ஜெர்மன் போலீஸ்துறை தெரிவித்தது.
அந்த நிகழ்ச்சியில் இரண்டு பாம்புகள் பயன்படுத்தப்பட்டு, பார்வையாளர்களின் கழுத்தில் சுற்றப்பட்டன.
பின்னர், அந்த பாம்புகளில் ஒன்றை ஜெர்மானியரின் கால்சட்டைக்குள் ஊர்ந்து செல்ல பாம்பாட்டி அனுமதித்தார்.
அது அவரது காலை தீண்டியதாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் உடலில் பாம்பின் விஷம் ஏறியதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதோடு , மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவருக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவர் இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இறந்தவரின் அடையாளம் தெரிவிக்கப்படவில்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் விடுமுறையில் இருந்தார்.
ஜெர்மன் காவல்துறையும் அரசு வழக்கறிஞர்களும் இந்த மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர், மேலும் நச்சுயியல் சோதனைகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.



