
சென்னை, மே-6-தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஏதுவாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதரவு கோரி விஜய் தங்களை அணுகியதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் கோரிக்கை குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் இறுதி முடிவை அறிவிப்பர் என்றார் அவர்.
திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பிரச்னையால், தேர்தலுக்கு முன்பே, TVK-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என பேச்சுகள் எழுந்து, கடைசியில் அது நடக்காமல் போனது.
விஜயும் ராகுல் காந்தியும் கைகோர்த்தால் குறைந்தது 190 இடங்களைப் பிடிக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர்.
எனினும் திமுக கூட்டணியிலேயே நீடித்த காங்கிரஸ் இம்முறை 5 இடங்களைப் பெற்றுள்ளது.
TVK-வுக்கு 108 இடங்கள் இருப்பதால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட விஜய் மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ், விஜய்யின் இந்த அழைப்பை ஏற்குமா அல்லது தற்போதைய கூட்டணியிலேயே நீடிக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை காங்கிரஸ் ஆதரவளித்தாலும் கூட, 118 இடங்களை எட்ட மேலும் சில சிறிய கட்சிகளின் ஆதரவு விஜய்க்குத் தேவைப்படுகிறது.
இவ்வேளையில், TVK, தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததன் அடிப்படையில் விஜயை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் இன்று முறைப்படி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை, நேரு உள் விளையாட்டரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
‘ஜோசப் விஜய் எனும் நான்…எனக் கூறி விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதைக் காண TVK தொண்டர்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.



