
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.
அந்நபருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதால், சந்தேக நபரிடமிருந்து எந்தக் குற்றஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே 4ஆம் தேதி, கிந்தா (Kinta) மாவட்டத்திலுள்ள தாமான் டேசா அமான் பகுதியில் வசித்து வந்த 70 வயதுடைய பெண்ணைக் கொலை செய்ததாக அந்த ஆடவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
முன்னதாக, உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் அப்பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



