
சென்னை, மே-20-மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறுவனர் மறைந்த வி. பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது, அரசியல் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
“முள்ளிவாய்க்கால் நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்; கடல் கடந்து வாழும் நம் தமிழ் உறவுகளின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிறப்போம்” என விஜய் தனது X தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், 1991-ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இந்தியாவில் தற்போதும் தடை செய்யப்பட்டுள்ள ஓர் இயக்கத்தின் தலைவருக்குத் தமிழகத்தின் முதல்வர் அஞ்சலி செலுத்துவதா ? என பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் கண்டனம் ஒருபக்கமிருக்க, ராஜீவ் காந்தியின் மகனும் இன்றைய இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் தான், விஜயின் TVK தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்து அரசை அமைத்துள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் விஜயின் செயல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கடலோரக் கிராமத்தில் நடந்த இறுதிப்போரின் போது, இலங்கை இராணுவத்தால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தப் போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன அந்தத் துயரமான மே 18-ஆம் நாளையே, இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் உலகத் தமிழர்களும் ஆண்டுதோறும் ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக’ அல்லது ‘தமிழின இனப்படுகொலை நினைவு நாளாக’ அனுசரித்து வருகின்றனர்.



