
நியூ யோர்க், ஜூன்-3-மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ (El Niño) இயற்கை வானிலை சுழற்சி ஆகிய இரண்டும் இணைந்து, வரும் மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஐநாவின் உலக வானிலை அமைப்பான WMO அவ்வாறு எச்சரித்துள்ளது.
பசிஃபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வெப்ப அலைகள் தீவிரமடைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சில இடங்களில் கடல் மட்டத்திற்கு அடியில் 6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் இது மேலும் வலுவடைந்து, வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த ஒரு ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிகழ்வாக மாறக்கூடும் என்று அனைத்துலக வானிலை கணிப்புகள் எச்சரிக்கின்றன.
இதன் காரணமாக தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், தென் அமெரிக்காவில் கடுமையான மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும்.
ஏற்கனவே புவி வெப்பமயமாதலால் தவித்து வரும் உலகிற்கு, இந்த எல் நினோ நிகழ்வு ‘எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல்’ அமையப் போகிறது என ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கவலைத் தெரிவித்துள்ளார்.



