சரவாக்கில் நெடுஞ்சாலை கட்டுமானப் பணியின்போது, நிலத்தடியிலிருந்து வெளியேறிய வாயு

கூச்சிங், ஜூன் 10 – சரவாக் குவாலா லாவாஸ் (Kuala Lawas) பகுதியில் அமைந்துள்ள Northern Coastal Highway நெடுஞ்சாலை கட்டுமானத் தளத்தில், துளையிடும் பணியின்போது நிலத்தடியில் இருந்து திடீரென வாயு வெளியேறியது.
ஒப்பந்த நிறுவனம் சுமார் 45 மீட்டர் ஆழம் வரை துளையிட்டபோது இந்த வாயு வெளியேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கண்காணித்தனர். வாயு தொடர்ந்து வெளியேறி வந்ததால், பாதுகாப்பு கருதி சம்பவ இடத்தைச் சுற்றி 30 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
மேலும், மேல் ஆய்வுகள் நடைபெறும் வரை துளையிடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிர்ச் சேதமோ காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



