
வாஷிங்டன், ஜூன்-16-உலகையே உற்றுநோக்க வைத்துள்ள அமெரிக்கா – ஈரான் இடையிலான வரலாற்றுப் பூர்வ உடன்படிக்கை குறித்து மேலும் ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுடன் எட்டப்படவுள்ள புதிய ஒப்பந்தத்தின் கீழ், அனைத்துலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த Hormuz நீரிணை வழித்தடம் எவ்வித சுங்கக் கட்டணமும் இன்றி, தடையற்ற அனைத்துலகப் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறந்துவிடப்படும் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டணம் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என்ற உலக நாடுகளின் அச்சத்திற்கு இதன் மூலம் வாஷிங்டன் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த குறுகிய Hormuz கடல் பகுதி வழியாகவே கடந்து செல்கிறது.
நீண்டகாலமாக இப்பகுதியில் நீடித்து வந்த பதற்ற நிலையைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடத்தப்பட்ட தீவிரப் பேச்சுவார்த்தையில், அனைத்துலகக் கப்பல்களின் கட்டணமில்லா தடையற்ற போக்குவரத்தை அமெரிக்கா ஒரு மிக முக்கிய நிபந்தனையாக முன்வைத்துப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் வணிகக் கப்பல் நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக அனைத்துலகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



