
கோலாலம்பூர், ஜூன்-25,
2027-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணையில், 6 வயது சிறுவர்களுக்கான முதலாமாண்டு பதிவு, கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பை விட பெருமளவில் குறைந்துள்ளது.
அடுத்தாண்டு முதலாம் வகுப்பு சேர்க்கைக்காக மொத்தம் 478, 419 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 7 வயது சிறுவர்களின் எண்ணிக்கை 450,000-க்கும் அதிகமாக இருக்கும் வேளையில், 6 வயதுடைய சிறுவர்களின் பதிவு வெறும் 73,386-ஆக மட்டுமே உள்ளது.
இது கல்வி அமைச்சு எதிர்பார்த்த 400,000 பதிவுகளில் வெறும் 18 விழுக்காடு மட்டுமே ஆகும்.
பதிவு எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, அடுத்தாண்டுக்கான ஒப்பந்த ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட 20,000-திலிருந்து 3,150-ஆகக் குறைக்கப்படும் என கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
புதிய கல்வி வரைவுத் திட்டத்தின் கீழ், 6 வயதில் பள்ளி சேர்க்கை என்பது கட்டாயமல்ல; அது பெற்றோரின் விருப்பத்திற்குரியது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், புதிய மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் 838 பள்ளிகளில் 2,500-க்கும் மேற்பட்ட புதிய வகுப்பறைகளை அமைக்கும் பணிகளை கல்வி அமைச்சு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.



