
கோலாலாம்பூர், ஜூன் -25-நாட்டிலுள்ள ‘கவாஸான் ருக்குன் தெத்தாங்கா’ எனப்படும் KRT குடியிருப்பு தொண்டூழியப்ப் படைகளுக்கான வருடாந்திர அரசாங்க மானியம், 6,000 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வரவேற்றுள்ளது.
‘மடானி கித்தா பெர்சாமா KRT’ திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த புதிய மானிய உயர்வு வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஒற்றுமை, இணக்கம் மற்றும் மக்களின் நலனுக்காகப் பங்காற்றி வரும் KRT அமைப்புகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் இதுவென தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 8,615 KRT அமைப்புகள் இயங்கி வருகின்றன.
சுமார் 250,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்புகளின் வழியாக, கடந்தாண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 12 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு, குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்த வழிவகுக்கும் என ஏரன் அகோ டகாங் நம்பிக்கைத் தெரிவித்தார்.



