
கோத்தா பாரு, ஜூன்-30 – தென் தாய்லாந்தின் தக்பாய் (Takbai) பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டுமென்று கிளாந்தான் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
தென் தாய்லாந்தின் பாதுகாப்பு நிலைமையை கணிக்க முடியாததால், அங்கு பயணம் செய்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கிளாந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் (Datuk Mohd Yusoff Mamat) தெரிவித்துள்ளார்.
நேற்று, தக்பாய், கம்போங் சாப்போம் (Kampung Sapom) பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 38 மற்றும் 45 வயதுடைய இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர். அவர்கள் பயணித்த வாகனமும் சேதமடைந்தது.
அவ்விருவரும் தற்போது நராதிவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



