
கோலாலம்பூர், ஜூலை-10 – தலைநகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த தட்டின் மீது எலி ஒன்று ஓடித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Threads சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் இவ்வீடியோ, கடந்த ஜூலை 7-ஆம் தேதி பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் கைப்பேசியைப் பயன்படுத்துவதில் மூழ்கியிருந்ததால், உணவின் மீது எலி உலாவுவதை அவர்கள் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த வலைத்தளவாசிகள் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதோடு, சுகாதார அமைச்சு உடனடியாக அந்த உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தி, சுகாதாரக் குறைபாட்டிற்காக அதனை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இதற்கு முன்பும் அதே உணவகத்தில் சாப்பிட்ட சிலருக்கு உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.



