
கோத்தா பாரு, ஜூலை.16- கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள Kampung Pulaiயில் சட்டவிரோத சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புடைய ஏழு கனரக இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த மூன்று சீன ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் இந்தோனேசியர்கள் என நம்பப்படும் பல தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி விட்டதாக மாநில நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் கூறியது.
மூன்று ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவுள்ள நிலத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது. நில உரிமையாளர் தம்மிடம் சுரங்க அனுமதி இருப்பதாகக் கூறிய நிலையில், அவர் நில மற்றும் சுரங்க அலுவகத்திடம் இருந்து எந்த அனுமதியையும் பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது. அவர் அச்சீன நிறுவனத்திடம் கொடுத்தது அவர் நில உரிமையாளர் என்ற கடிதம் மட்டுமே என்பதும் தெரிய வந்தது.
குறிப்பிட்ட அப்பகுதியில், சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் 100 கிராம் தங்கத்தைப் பெற முடிந்ததாகக் கூறப்படுகிறது. கனிமச் சட்டம் 2001 மற்றும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்களின் கீழ், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.



